கலாம் ஆகும் காலம்!


தூக்கத்தைத் தொலைக்கும் கனவை
துரத்தச் சொன்ன கலாம்
தூங்கா விதைகளை
வெளியெங்கும் விதைத்துச்சென்ற கலாம்

எதனினும் கொடிய
இளமையில் வறுமை கண்ட கலாம்
அதனினும் அரிய
உயர்வினில் எளிமை கொண்ட கலாம்

அறிவு பலம் நேர்மைத் திறம்
கொண்டு சாதித்த கலாம்
அவ்வாறு வாழ நினைப்போரிலெலாம்
வாழ்வாங்கு வாழ்வார் கலாம்

விரும்பியதைச் செய்யும்போதே
காலம் ஆன கலாம்
அவர்தம் ஆத்மா நிறையும், ஒவ்வொருவர்
கலாம் ஆகும் காலம்!

கவிதையெழுதலாம் வாங்க!

வித்தியாசமான பாடுபொருட்களை
ஆகச்சிறந்த வார்த்தைகளில்
அடக்கியாளும் கலை
என் கவிதைகளில்
கைவரப்பெறுவதில்லை

மூன்றாவது வரியிலோ
அதற்கும் முன்னரோ கூட
'புரிந்து'விடுபவை தான்
என் பின்நவீனத்துவ
கவிதை முயற்சிகள்

குட்டைப் போர்வையினால்
உடல்மூட முனைவதுபோல்
அடங்கா வார்த்தைகள் சில
அங்கங்கே
துருத்திக்கொண்டுதானிருக்கும்

'நாற்பது வரிகளுக்கு மிகாமல்'-
குறிப்புகளைப் புறந்தள்ளியே
விடையெழுதிப் பழகிவிட்ட எனக்கு
நான்குவரிக் கவிதையெல்லாம்
ரசித்துப் படிக்க மட்டுமே

வார்த்தை அடுக்குகளையே
'கவிதை' என வகைப்படுத்தத் துணிந்துவிடும்
என் இவ்வரிகளை வாசிக்கும்போதே
"நாமும் கூட கவிதை எழுதிவிடலாம்" என்று
கற்பனை விதை
உங்களுக்குள் முளைவிடுமாயின்
வேறொரு பயனும்
வேண்டி நிற்கா என் கவிதைகள்!

நிரந்தரம்!

வெற்றிகளுக்காக மட்டுமே
காத்திருக்கும்
இரத்தினக்கம்பள வரவேற்புகள்
இருக்கும் வரை

தன் தவறுகளுக்குத்
தானே பொறுப்பேற்கும் தைரியம்
அனைவரிடத்தும்
வாய்க்கும் வரை

உழைத்த கூலியையும்
ஒருவேளை சோற்றையும்
உரிமையுடன் கேட்டுப் பெறமுடியா
அவலம் நீடிக்கும் வரை

தரத்தைப் புறந்தள்ளி
இலவசங்களில் ஈர்க்கப்படும்
இன்றைய நிலை
மாறும் வரை

சந்தேகத்தைத் துணை கொண்டு
உண்மை அன்பிற்கு
வைக்கப்படும் சோதனைகள்
தொடரும் வரை

பொய்மை நிரந்தரம்!

காகித இதயங்கள்!

ஆறாம் வகுப்பில் விடுதியில் தங்கி படிக்க ஆரம்பித்த போதுதான் ஆரம்பமானது, கடிதம் எழுதுவது. அதற்கு முன்னர் வாய்ப்புகள் இல்லை. விடுப்பு விண்ணப்பக்கடிதம் கூட எழுதியதில்லை என நினைக்கிறேன். விடுதியில் சேர்ந்த பின்பு வீட்டிலுள்ளவர்களுக்கும் எனக்குமிடையேயான இடைவெளியை கண்ணுக்குத் தெரியாத கயிறுகளால் இணைத்தவை கடிதங்கள். பதினைந்துபைசா மஞ்சள் அட்டைகளும், எழுபத்தைந்து பைசா இன்லேண்ட் லெட்டர்களும் எழுதி முடியா எண்ணங்களை சுமந்து கொண்டு இங்கும் அங்குமாக போய் வந்துகொண்டிருக்கும்.

"அன்புள்ள அப்பா அவர்களுக்கு...", "அன்பும் பாசமும் நிறைந்த அப்பா அவர்களுக்கு...", "அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த நண்பனுக்கு" என்று விதவிதமான விளிப்புகளுடன் தொடங்கி, நல விசாரிப்புகள், தேவைகள், பணம், எப்பொழுது பார்க்க வரவேண்டும், என்ன வாங்கி வர வேண்டும் என்பது போன்ற, எந்த கட்டிலும் வரையறைகளிலும் அடங்காத வாக்கியங்கள் அடங்கியதாகவே அது பெரும்பாலும் இருக்கும். மாரி பிஸ்கட் ஒரு பாக்கெட், நல்ல காயாக உள்ள கொய்யாக்காய்கள் சில, இது போல பட்டியலிட்டு கூட நான் எழுதி இருக்கிறேன். ஒருமுறை என்னைப் பார்க்க வந்த அப்பா, நான் எழுதிய கடிதங்களில் உள்ள தவறுகளை சிவப்பு மையினால் திருத்தி(ஆசிரியர் அல்லவா) கொண்டு வந்து, என் நண்பர்கள் சூழ்ந்து நிற்க என்னென்ன தவறு, எப்படி எழுதி இருக்க வேண்டும் என விளக்கினார். அப்பொழுது என்ன மனநிலையில் அதை எதிர்கொண்டேன் எனத்தெரியவில்லை. இப்பொழுது நினைத்தால் சிலிர்க்கிறது.

மதிய உணவிற்காக விடுதிக்கு வரும்போது, அன்றைய தின கடிதங்களை விடுதிக்காப்பாளர்அறை முன்பு பரப்பி வைத்திருப்பார்கள். கடிதம் வந்திருந்தால் அதை எடுத்துக்கொண்டு நடக்கும்போது ஒரு விதமான பெருமிதமும், எதிர்பார்த்து வராவிட்டால் ஏக்கமமுமான உணர்ச்சிப் பொழுதுகள் அவை. அப்பாவின் கையெழுத்தில் "அன்புள்ள எனது மகன் சிரஞ்சீவி கனகராசுவிற்கு," என வாசிக்கும்போதே ஏதோ ஒன்று தொண்டையில் உருவாகி, கண்களை நிறைத்திருக்கும். என்ன ஏதுவென்று புரியாமலே வேகவேகமாக கடிதம் முழுவதும் படித்து முடித்து அதன் சாராம்சத்தை தெரிந்து கொண்ட பின்பு தான் ஒரு ஆசுவாசம் வரும். அதன் பிறகு தான் நிதானமாக முழுவதும் படிப்பது. அப்பழக்கத்தினால் இன்று மின்மடலைக் கூட அப்படித்தான் படிக்கிறேன்.

படம் வரைவது, ஒவ்வொரு வரியையும் ஒரு வண்ணத்தில் எழுதுவது போன்ற புதிய முயற்சிகள் கூட அரங்கேற்றப்படும். ஒருமுறை ஒரு அஞ்சலட்டையில் இடம் போதாததால் தொடரும் போட்டு, இன்னொரு அட்டையில் மீதியை எழுதி இரண்டையும் ஒன்றாக அஞ்சல் செய்திருக்கிறேன். மகிழ்ச்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் "நலம். நலமறிய ஆவல்" தான் இரண்டாம் வரியாக இருக்கும். ஒருமுறை காய்ச்சல் வந்து உடல் நலமில்லாமல் போனபோது, வந்து உடனே வீட்டிற்கு அழைத்துச்செல்ல வேண்டி அப்பாவிற்கு எழுதிய கடிதத்தில் கூட "நலம். நலமறிய ஆவல்" எழுதிவிட்டு தான் எழுதினேன். முதல் வரிகளை படிக்கும் போது என்ன மனநிலையில் இருப்பார்கள் என எனக்குத் தெரியும். அதனால் அமங்களமாகத் தொடங்காமல் மகிழ்சியாகத் தொடங்குவதே என்னுடைய வழக்கம். காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறைகள், கோடை விடுமுறைகளின் போது நண்பர்களுக்கு கடிதம் எழுதுவது உண்டு.

எல்லா தினத்திற்கும் விதவிதமான வாழ்த்து அட்டைகள் பரிமாறிக்கொள்ளப்படும் இக்காலம் போல் அல்லாமல், அக்காலத்தில் ஒரே தினத்திற்கு தான் வாழ்த்து அட்டை உண்டு. பொங்கல் வாழ்த்து! வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த பண்டிகையின் போது உச்சபட்ச திறமைகள் வெளிக்கொணரப்படும். விடுதியிலிருந்து வீட்டிற்கு, அதுவும் விடுமுறைக்கு ஊருக்கு செல்வதற்கு முன்தினம் அஞ்சல் செய்து அடுத்த நாள் நாம் வீட்டிலிருக்கும் சமயம் வினியோகம் செய்யும் போது நாமே வாங்கி யாரோ அனுப்பியது போல் பாவித்து வீட்டிலுள்ளவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி தருவது, விடுதியிலிருக்கும் போதே சக நண்பர்களின் வீடுகளுக்கு மாறி மாறி பொங்கல் வாழ்த்து அனுப்பிக்கொள்வது, வீட்டிற்கு வந்த பின்பும் நண்பர்களின் வீடுகளுக்கு மாட்டுப்பொங்கல் வாழ்த்து அட்டையை அனுப்பி சந்தோசப் படுத்துவது போன்ற பலப்பல மகிழ்ச்சி தருணங்கள்.

கல்லூரியில் சேர்ந்த பின்பு கடிதங்களின் எண்ணிக்கை குறைந்தபோதும் நின்றுவிடவில்லை. ஆனால் வீட்டில் தொலைபேசி நிறுவப்பட்ட பின்பு நின்று போனது. மாறாக வாழ்த்து அட்டைகள் கொடுப்பது அதிகரித்துவிட்டது. எழுதி, மடித்து, தபால்தலை ஒட்டி அஞ்சல் செய்வது போன்றவைகள் மறைந்து, நேருக்குநேர் கொடுத்துவிடும் பழக்கம் ஏற்பட்டது. பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளில், அனைவரும் நல்ல மனங்கவரும் வார்த்தைகள் உள்ள அட்டையாக தேடிக்கொண்டிருக்க, நான் மட்டும் நிறைய பக்கங்களும் வெற்றிடமும் உள்ள அட்டையாகத் தேடுவேன். அப்போதைய (இப்ப மட்டும்?) என்னுடைய ஆங்கில அறிவுக்கு வார்த்தைகள் தேடுவது சற்று சிரமமான காரியம். அதற்கு பதில் நானே எழுதிவிடுவது(தமிழில்) என் வழக்கம். வாழ்த்து, அறிவுரை, நையாண்டி என அனைத்தும் கலந்த பெரிய சொற்பொழிவுகளுக்கு சமமானவைகளாக இருக்கும் அவை. என் அன்பிற்காக அவைகளை என் நண்பர்கள் பொறுத்துக்கொண்டார்கள் என நினைக்கிறேன்..;)

பணிக்கு வந்தபின்பு மின்மடல்கள், கடிதத்திற்கு மாற்றாக வந்து விட்டது. இருந்தாலும் கடிதம் எழுதுவதில் இருக்கும் நெருக்கமான உணர்வு மின்மடல்களில் இல்லை. கடிதத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளுக்கு இணையானவை எழுதியவரின் கையெழுத்து. பேசும்போது ஒருவர் வெளிப்படுத்தும் அங்க அசைவுகளுக்குள்ள தனித்தன்மை போல, ஒவ்வொருவர் கையெழுத்தும் எழுதியவரின் எழுத்து வழி குறியீட்டு வடிவம். எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் கூட தன் மகன்/மகள் எழுதிய கடிதங்களை இனம் கண்டுகொள்வது அந்த தனித்தன்மையினால் தான். இந்த உணர்வு மின்மடல்களில் வராது.

பத்திரிக்கைகளுக்கு வெகு சில கடிதங்களும் மின்மடல்களும் எழுதியிருக்கிறேன். அபூர்வமாகவே பதில் வரும். பதிலை எதிர் நோக்கியே கடிதம் எழுதப் பழகிவிட்ட எனக்கு இது மிகவும் வருத்தமளிப்பதாக இருந்ததால் நிறுத்திக்கொண்டேன். காதல் கடிதங்கள் எழுதும் அளவிற்கு காதலியோ, காதலோ இன்னும் வாய்க்கவில்லை. எதிர்காலத்தில் வாய்க்கலாம்.

அறிவியலின் வளர்ச்சியால் நான்(ம்) தொலைத்துவிட்ட வழக்கங்களில் ஒன்று கடிதம் எழுதுவது. பேச்சில் சொல்லப்பட்டதை விட எழுத்தில் சொல்லப்பட்ட அன்பிற்கு, வலிமையும் உண்மையும் ஆயுளும் அதிகம் என்பது என் கருத்து. திரைப்படங்களில் கடிதம் வாசிக்கப்படும் போது அதை எழுதியவர் முகத்தை அந்த கடிதத்தில் தெரியச்செய்து, அவர்குரலிலேயே கடிதம் வாசிக்கப்படுவது போல் காட்டப்படும். ஏதோ ஒரு இயக்குநர் கண்டறிந்த கதை சொல்லும் உத்தி என ஒதுக்கி விடமுடியாத, வாசிப்பவரின் மனநிலையைத் தெள்ளெனப் பிரதிபலிக்கும் காட்சி அது என்பது கடித வாசிப்பனுபவம் உள்ள எவருக்கும் புரியும். இதயத்திலிருக்கும் உணர்வுகளை வார்த்தைகளில் தாங்கி உலா வரும் கடிதங்களை "காகித இதயங்கள்"(அப்பாடா தலைப்பு வந்திடுச்சு) என்பதைத் தவிர என்ன சொல்லி வருணிக்க?

(நான் திக்கித்திணறி இத்தன வார்த்தைகள்ல சொன்னத, ஒரே படத்துல இன்னாமா சொல்லீட்டாங்கப்பா)

பின்குறிப்பு: "காகித இதயங்கள்" என்ற உருவகம் சரியா என்பதில் எனக்கும் சந்தேகம் உள்ளது. இருந்தாலும் அந்த சொல்லாடல் எனக்குப் பிடித்திருப்பதால் அதையே உபயோகித்துள்ளேன். தவறெனில், என் கோடானுகோடி (சரி...சரி) வாசகர்கள் பொறுத்தருள வேண்டும்.

கனகைக் கவர்ந்தவை #3

படிம ஆடை
அணி அலங்கார
ஒப்பனைகளுடன்
அரங்கேறிய உங்கள்
அடையாளம் தெரியவில்லை
எனக்கு
மேடையின் பின்னே
ஒப்பனை அறையின்
எளிய வாயிலில்
காத்திருக்கிறேன்
முகம் பார்க்க...

- புவியரசு
('கணையாழி கடைசிப்பக்கங்கள்' புத்தகத்தில் வாசித்தது. 1976 ஜுலை இதழில் வெளியானது)

பூவதிரும் ஓசை!

இரு நாட்களாகப் பெய்து வந்த மழை இன்று தணிந்திருந்தது. ஆனாலும் வானம் இருண்டிருந்த அந்த பிற்பகல் வேளை இரவு போலிருந்தது. காற்று, தரை, சுவர் எங்கும் ஈரப்பதம். எதுவும் செய்ய விருப்பமற்ற, தூங்கவும் இயலாத ஒரு மந்தமான நிலை, கண்மூடி கனவு காண அழைத்தது. உள்ளறை சென்று, படுக்கை விரித்து, பக்கவாட்டில் கால்கள் ஒன்றின் மீது ஒன்று வருமாறு வைத்து மடக்கி உடல் குறுக்கி, போர்வையை இறுக்கிப் போர்த்தி படுத்தேன். கண்கள் மூடியதும் காட்சி விரிந்தது.

ஆளரவமற்ற வீதி. நீண்டு கிடந்தது நிசப்தம். வீதியின் இரு மருங்கிலும் மரங்கள். மரம் முழுவதும் மலர்கள். மஞ்சள் மலர்கள். வீதிமுழுவதும் விழுந்தும் கிடந்தன, அடுக்கி வைக்கப்பட்ட நேர்த்தியுடன். வசந்தத்தின் உச்சம். எங்கும் மஞ்சள். மங்களகரம். நீண்ட அலகினையுடைய பறவை ஒன்று சத்தமின்றி பூ கொத்திக் கொண்டிருந்தது. அதுவும் மஞ்சள் நிறமே. ஒரு மர அடியில் இருந்த நீண்ட இருக்கையில் ஒருவன் அமர்ந்திருக்கிறான். இரு கைகளையும் இருக்கையின் கைப்பிடியில் தளரவிட்டு, முகத்தை மேலுயர்த்தி கண்கள் மூடிய நிலையில். அருகினில் சென்று பார்த்தால், ஓ...நான் தான்!

என்ன ஒரு தனிமைச் சுகம்? எனக்காக நானே படைத்துக்கொண்ட கனவுலகம். சன்னமான காற்று வீசினால் இன்னும் சுகமாக இருக்கும். என்ன அது சத்தம்? பூவதிரும் சத்தம். கண்விழித்தேன். என் வலப்பக்கம், சிறிது தொலைவில் ஒருத்தி வந்து கொண்டிருந்தாள். நெருங்க நெருங்க இதம். எனை நோக்கித்தான் வருகிறாளோ? இல்லை இல்லை எனைப் பார்ப்பதாகத் தெரியவில்லையே.

"ஏ பெண்ணே? யார் நீ?"

"நீங்கள் யாரோ?"

"நானல்லவா முதலில் கேட்டேன்?"

"அதனால்?"

"விடையையும் முதலில் அறியும் தகுதி படைத்தவனாகிறேன்"

அவளின் ஒவ்வொரு சொல்லிலும் இதம்!

"தன் வழியில் போய்க்கொண்டிருந்தவளை நிறுத்தி, எனை யாரென அறிய முயலும் நீங்கள் யாரென முதலில் நானறிவது தானே முறை?"

என்ன பதில் சொல்வது இதற்கு? நான் யாரென்பதைத் தவிர?

"நான் இக்கனவு வீதியைப் படைத்தவன். இங்குள்ள ஒவ்வொன்றும் என் விருப்பத்தின் பேரில் அமைந்தவை. இவ்வீதியை அறிந்தார் எனையன்றி யாருமில்லை. இப்பொழுதாவது சொல்? யார் நீ?"

"இங்குள்ள ஒவ்வொன்றும் நீர் படைத்ததென்றால், நான் மட்டும் எப்படி வர முடியும்? எல்லாம் படைத்த உங்களுக்கு நான் யாரென்பது மட்டும் தெரியவில்லையா?"

"ஆ... நீ மிகுந்த அறிவுள்ளவளாக இருக்கிறாய்"

"மன்னிக்கவும். உங்கள் அறியாமையை மறைக்க என்னை அறிவுள்ளவளாக்க வேண்டாம்"

"மறுபடியும் நிரூபிக்கிறாய், உன் அறிவை. இல்லை இல்லை என் அறியாமையை. போதும் சொல்லிவிடு"

"தென்றல் என்பர் என்னை"

"ஓ... என் நினைவிலிருந்து படைக்கப்பட்டவள். இதம் பரவும் போதே நான் உணர்ந்திருக்க வேண்டும். வந்தமைக்கு நன்றி. வா...வந்திங்கு சிறிது நேரம் என்னருகினில் அமர்"

"இல்லை. முடியாது"

"ஏன்? எனக்காகத்தானே வந்தாய். நானல்லவா உனைப் படைத்தது? என்னருகினில் அமரமாட்டாயா?"

"படைத்தவரென்றால்? அடங்கி விட வேண்டுமா?"

இமை குறுக்கி, கன்னக்கதுப்புகள் உப்ப, இதழ்விரிய புன்னகை புரிந்தாள் தென்றல் பெண். இதம் இதம்!

"தேங்கி நிற்பதல்ல என் பண்பு. என் பயணத்தில் தான் பயன். வருகிறேன்"

மறைந்து விட்டாள், தென்றல். எனதாக்கிக் கொள்ள எத்தனித்ததை அவதானித்துக் கொண்டாளோ?. இன்னும் இன்னும் இதம்! இதம்!

போர்வைக்குள் பொதிந்து கண்மூடி, குறுநகை புரியுமென் முகம் பார்த்தால், எனைப் பைத்தியக்காரன் என நினைப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இருக்காது.

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்!


தென்னாப்பிரிக்காவுடனான தொடர் தோல்வியிலிருந்து மீண்டுவிடலாம் என எண்ணியிருந்த ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தது நியூசிலாந்து, பெர்த் நகரில் நடந்த கிரிக்கெட் போட்டியில். இதே வேளையில் மெல்பர்ன் நகரில் நடந்த ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி - சானியா மிர்சா இணை கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் பட்டம் வென்றது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்! கிராண்ட்ஸ்லாம் எனப்படும் முதல் தர டென்னிஸ் போட்டிகளில் (ஆஸ்திரேலிய, அமெரிக்க, ஃபெரெஞ்ச் ஓப்பன் மற்றும் விம்பிள்டன் போட்டிகள்) பட்டம் வெல்லும் முதல் இந்திய பெண் சானியா!

ஆண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் சுவிட்சர்லான்தை சேர்ந்த ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபேல் நடாலிடம் தோல்வியுற்றார்.

பரிசளிப்பு விழாவில், இரண்டாமிடக் கோப்பையை பெற பெடரர் இவ்வாறு அழைக்கப்பட்டார். "இந்த நாடு(ஆஸ்திரேலியா) யாராவது ஒரு விளையாட்டு வீரரை தத்தெடுக்க விரும்பினால் அது இவர் தான்". ஆஸ்திரேலியாவில் இல்லாத விளையாட்டு வீரர்களா? அந்த அளவுக்கு திறமையும், ஆஸ்திரேலியர்களின் நன் மதிப்பையும் பெற்றவர் ஃபெடரர்.

பதக்கத்தட்டை பெற்றுக்கொண்டு ஏற்புரை கூற முயன்ற ஃபெடரருக்கு வார்த்தைகள் வரவில்லை. மிகுந்த கரவொலி வேறு.

"அடுத்தமுறை வெல்ல முயற்சி செய்வேன்... எனக்குத் தெரியவில்லை... கடவுளே... இது(தோல்வி) என்னைக் கொல்கிறது..."

இதற்கு மேல் பேச இயலாமல் உடைந்து அழுதேவிட்டார். வெகுநேரம். யாருக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை, கரவொலி எழுப்புவதைத் தவிர. "வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு" போன்ற சாதாரண ஆறுதல் வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் ஃபெடரர். அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே தோல்விகளைச் சந்தித்தவர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இதுவரை 5 முறை அமெரிக்க ஓப்பன், 5 முறை விம்பிள்டன், 3 முறை ஆஸ்திரேலிய ஓப்பன், ஆக மொத்தம், 13 முறை பட்டம் வென்றுள்ள ஃபெடரருக்கு, அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற பீட்சாம்ராஸின் சாதனையை சமன் செய்ய தேவைப்படுவது இன்னும் ஒன்று மட்டுமே. 237 வாரங்களாக, ஏறக்குறைய நாலரை ஆண்டுகளுக்கு மேல், தொடர்ந்து உலக டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் முதலிடம் வகித்தவர் ஃபெடரர். (முந்தைய சாதனை: பெண்கள் பிரிவில் ஸ்டெஃபி கிராஃப் 186 வாரங்கள், ஆண்கள் பிரிவில் கான்னார் 160 வாரங்கள்). இதைப்போல இன்னும் பலப்பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான ஃபெடரருக்கு கடந்த ஆகஸ்ட் முதல் கொஞ்சம் இறங்கு முகம். தொல்விகளை சந்திக்கத் துவங்கிய ஃபெடரர், 2009 ஆம் ஆண்டை நல்ல முறையில் துவக்க, ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டிகளை எதிர் நோக்கி இருந்தார். துவக்கச் சுற்றுப் போட்டிகளில் நன்றாக ஆடி இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றார். எதிர்த்து ஆட வேண்டியவர் ரஃபேல் நடால். பெரும்பாலானோர், ஃபெடரரே வெற்றி பெறுவார் என்று கணித்த கணிப்பு பொய்யாக நடால் வென்றார். இதில் நடாலின் திறமை ஒரு புறமிருக்க, ஃபெடரர் செய்த தவறுகளே அவர் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. அதுதான் அவ்வளவு பேர் முன்னிலையில், அதுவும் தன்னை மதிக்கும், நேசிக்கும் கூட்டத்தில், அழக்காரணம்.


ஃபெடரரின் அழுகையினால் என்ன செய்வதென்றறியாத அறிவிப்பாளர், அவரிடம் சென்று பேசிவிட்டு, "ஃபெடரர் சிறிது நேரம் சாந்தமாகட்டும்" எனச்சொல்லி நடாலை வெற்றிக் கோப்பையை பெற அழைத்தார். வரும் போதே ஃபெடரரை தட்டிக்கொடுத்து விட்டு வந்த நடால், கோப்பையைப் பெற்றவுடன் மறுபடியும் ஃபெடரரிடம் தான் சென்றார். இருவரும் ஏதோ பெசிக்கொள்ள, நடாலை இருக்கச் செய்து ஃபெடரரே திரும்ப பேச வந்தார்.

"மறுபடியும் நான் பேச முயற்சி செய்கிறேன். (இந்த மேடையில்) கடைசி வார்த்தைகளை நான் பேச விரும்பவில்லை(சிரிக்கிறார்). இவருக்கு (நடாலை காண்பித்து) அதற்கான முழுத்தகுதியும் இருக்கிறது. நீ மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாய். இதற்கு நீ தகுதியனவனே" எனச் சொல்லி அனைவருக்கும் நன்றி தெரிவித்து "அடுத்த வருடம் சந்திப்போம்" என்று மறுபடியும் கண்ணீருடன் விடைபெற்றார்.

அடுத்து பேச வந்த நடால், "ரோஜர், இன்றைய நிகழ்விற்காக என்னை மன்னித்து விடுங்கள். எனக்குத் தெரியும் உங்களுடைய இப்போதைய உணர்வு எப்படி இருக்குமென்று. மிகவும் கடினமான வலி அது. ஆனால், நீங்கள் ஒரு சிறந்த வெற்றி வீரர் என்பதை மறக்க வேண்டாம். வரலாற்றின் சிறந்த வெற்றி வீரர்களில் நீங்களும் ஒருவர். பீட்சாம்ராஸின் சாதனையை நிச்சயம் முறியடிப்பீர்கள்" எனச் சொல்லி தன் வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார்.

ஆஸ்திரேலிய ஓப்பன் போன்ற மிகப்பெரிய போட்டியில் முதல் முறையாக வென்றுவிட்டு, அதுவும் அப்பட்டத்தை வெல்லும் முதல் ஸ்பானிய வீரர் என்ற சாதனையுடன், தன் வெற்றிக்களிப்பை மிகுதியாக வெளிப்படுத்தாமல் சக எதிர் வீரரின் உணர்வுகளைப் புரிந்து பேச எத்தனை பேரால் முடியும்? சக வீரர்களை களத்தில் மட்டுமே எதிர்த்து விளையாடும் விளையாட்டுணர்வின் இலக்கணம், நடாலின் அந்த பேச்சு.

நடால் மட்டும் சாதனைகளில் இளைத்தவரா? ஃபெடரர்-நடால் இணை தான் டென்னிஸ் வரலாற்றின் சிறந்த எதிர் இணை என்ற பெருமை படைத்தது. எல்லா கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் சாதனை செய்த ஃபெடரரால், ஃபிரெஞ்ச் ஓப்பனில் மட்டும் ஒரு பட்டம் கூட வெல்ல இயலவில்லை. காரணம் நடால். "களிமண்தரை அரசன்" என புகழப்படும் நடால் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து ஃபிரெஞ்ச் ஓப்பன் வெற்றியாளர். கடுந்தரை(Hard court), புல்தரை(Grass court), களிமண்தரை(Clay court) என்று மூன்று விதமான தரைகளில் டென்னிஸ் ஆடப்படுகிறது. இந்த ஆஸ்திரேலிய ஓப்பன் வெற்றி மூலம் மூன்று விதமான தரைகளும் கொண்ட கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்ற மூன்றாவது வீரர் என்ற பெருமை நடால் வசம் (ஆஸ்திரேலிய ஓப்பன், அமெரிக்கன் ஓப்பன் - கடுந்தரை, விம்பிள்டன்-புல்தரை, ஃபிரெஞ்ச் ஓப்பன்-களிமண் தரை). ஃபெடரருக்கு களிமண் தரை இன்னமும் சவாலே. இத்தனை சாதனைகளும் செய்திருக்கும் நடாலின் வயது 22 (ஃபெடரரின் வயது 27). 22 வயதில் ஃபெடரர் வென்றிருந்தது ஒரே ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் மட்டுமே. நடாலிடம் இப்போது 6 பட்டங்கள். தவிர்க்க இயலாத காரணங்கள் இருந்தாலொழிய, அனைத்து சாதனைகளையும் முறியடிக்கவும், யாராலும் முறியடிக்கமுடியாத சாதனைகளை செய்யவும் நடாலால் முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

ஃபெடரருக்கு,
கவலைப்படதே நண்பா, பீட்சாம்ப்ராஸின் சாதனையை நீ முறியடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!

நடாலுக்கு,
பல உச்சங்கள் நீ தொடக் காத்திருக்கின்றன!