பொன்னியின் செல்வன்

(இது பொன்னியின் செல்வனின் கதை அல்ல. பொன்னியின் செல்வனை நான் படித்த கதை)

"கல்கி எழுதிய சரித்திர நாவல்களில் தலை சிறந்தது எது?"
என்ற ஒரு மதிப்பெண் வினாவிற்கான விடையாக மட்டுமே பொன்னியின் செல்வனை' அறிந்திருந்த நான், அதை படிக்க நேர்ந்தது ஒரு தற்செயல். சிறுவர்மலர், வாரமலர், குமுதம், விகடன் வார இதழ்களிலும், ராஜேஷ்குமார், சுபாவின் 'திக் திக்' நாவல்களிலும் அடங்கியிருந்த என் வாசிப்பு வட்டத்தின் விட்டம், பெருமளவு அதிகரிக்ககத் தொடங்கியது 'பொன்னியின் செல்வனை' படித்த பின்பே.

கோவை அரசு பொறியியற் கல்லூரியில் நான்காமாண்டு படித்துக்கொண்டிருந்த காலமது. 'No due form'ல் கையெழுத்து வாங்குவதற்காக மட்டுமே கல்லூரி நூலகத்திற்குச் செல்லும் வழக்கமுடைய என்னை 'R S புரம்' மாவட்ட மைய நூலகம் தன் நிரந்தர வாசகனாக்கிக் கொண்டது. அங்கு அமர்ந்து முதலில் படித்த நாவல் நா.பார்த்தசாரதி அவர்களின் 'பொன்விலங்கு'. கதை முழுவதும் நினைவில் இல்லையெனினும் ஆசிரியப் பணிக்காக ஒரு மலை கிராமத்தின் செல்வந்தர் வீட்டுக்குச் செல்லும் பட்டதாரி வாலிபனின் கதை என்பது மட்டும் நினைவில் உள்ளது. ஒரு ஆரம்பம், பக்கத்திற்குப் பக்கம் திருப்பங்கள், பெரும்பாலும் "நீயா அது?... நானே தான்!" வகை முடிவுகள், இவை தான் அதுவரை நானறிந்திருந்த நாவல் நடை. இந்த இலக்கணங்களை மாற்றி, எதார்த்த உலகினை நாவல் எழுத்தில் எனக்கு காட்டியது 'பொன்விலங்கு'.

'பொன்விலங்கை' படித்தபின், இன்னும் அரை மணி நேரம் ஏதேனும் படிக்கலாம் என தேடிய போது கண்ணில் பட்டது 'பொன்னியின் செல்வன்'. பல தொகுதிகளும், பக்கங்களும் கொண்டது என்பது பெரிய மலைப்பை கொடுத்த போதும் ஏதோ ஒரு உந்துதலினால், முதல் தொகுதியை எடுத்துக் கொண்டு படிக்க அமர்ந்தேன். ஆரம்பித்த இரண்டு பக்கங்களிலேயே கல்கி என்னை ஆட்கொண்டுவிட்டார். இவ்வளவு காலம் படிக்காமலிருந்த என் அறியாமையை, படிப்பதற்கு முன் யோசித்த என் பேதைமை எண்ணி வெட்கிட வைத்தார்.

காட்சிகளை கண் முன் நடப்பது போல விவரித்திடும் அந்த எழுத்து நடை எனக்கு புதிதாக இருந்தது. வாசிக்க வாசிக்க பரவசமேற்படுதியது. வீராணம் ஏரியில் நடக்கும் ஆடித்திருநாள் காட்சிகள் என் கண் முன்னே விரிந்து, நானும் வந்திய தேவன் போல அக்காட்சிகளுக்குள் பயணித்தேன். அரை மணி நேரத்திற்கு கணக்கு பார்த்தவன், நூலகம் மூடும் வரை(இரவு 8 மணி என நியாபகம்) படித்துக் கொண்டிருந்தேன். அதன் பின் வந்த நாட்களில் பொன்னியின் செல்வன் பித்து பிடித்து திரிந்தேன். தினமும் கல்லூரி முடிந்த மாலை வேளைகள், பொன்னியின் செல்வனால் நிரப்பப்பட்டன. வந்தியதேவனும், குந்தவையும், அருண்மொழிவர்மரும், வானதியும், என் உறவுகளாகிப் போயினர்.

ரசித்து, ருசித்து, அனுபவித்து படித்து வந்தேன். படித்த பின்பு எண்ணிப்பார்த்து மகிழ்ந்திட நிறைய இருந்தன. எனவே ஒரு நாளைக்கு நூறு பக்கங்களுக்கு மிகாமல் படிப்பதில்லையென வைத்துக்கொண்டு, இரவு உணவுக்கு பின் படுக்கையில் படுத்து படித்தவற்றை அசை போட்டுக் கொண்டிருப்பேன். மூன்றாம் தொகுதியை படித்துக்கொண்டிருக்கும் போது, இன்னொருவரும் அதற்கு போட்டிக்கு வந்துவிட்டார். யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு அன்றைக்கு யோகம். ஒரு நாள் அவர் என்னை முந்திவிட, வருத்தத்துடன் வேறு புத்தகத்தை தேட ஆரம்பித்தேன். தேடலின் போது தான் தெரிந்தது மூன்றாம் தொகுதி, இன்னொரு பிரதியும் இருப்பது. முழுதாக தேடியபோது அனைத்து தொகுதிகளுமே இரு பிரதிகள் இருந்தது. எதிர்பாரா சந்தோசத்தின் உச்சகட்டம் அது!

ஏறக்குறைய ஒண்ணரை மாதங்கள் ஆனதாக நியாபகம். நண்பர்களுடன் ஊர் சுற்றவோ, சினிமாவிற்கோ செல்வதைக் கூட சில பல முறைகள் தவிர்த்திருக்கிறேன், நாவலை படிப்பதற்காக. நூலகத்தின் வார விடுமுறை நாட்களில் தவித்திருக்கிறேன். கடைசி நூறு பக்கங்களை ஒரு சனிக்கிழமை காலை வேலையில் வரும்படி பார்த்து, மிகுந்த பரவசத்துடனும் உணர்ச்சிப்பெருக்குடனும் படித்து முடித்தேன். அருண்மொழியின் தியாகமும், மணிமேகலையின் மறைவும் பல நாட்கள் என் மனதில் வேரூன்றியிருந்தது...இன்னும் இருக்கிறது!

கல்லூரி முடித்து பணிக்கு வந்த இரண்டாம் ஆண்டு சொந்தமாக பொன்னியின் செல்வன் வாங்கி இன்னொருமுறை படித்தேன். முதல் முறை படித்த போதிருந்த அதே உணர்வுகள், விறுவிறுப்பு. பலருக்கும் பரிந்துரைத்து படிக்க வைத்திருக்கிறேன். சில சமயங்களில் என் புத்தகத்தை கொடுத்தே! என் ஐந்து தொகுதிகளும் இன்று என்னிடம் இல்லை. அதற்காக நான் வருத்தப் படவில்லை. யான் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்!

பொன்னியின் செல்வனை இணையத்தில் படித்திட...

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

Naan padithathu tharcheyal alla
kadhaigalilum, katturaigalilum athan perumai padithu..pala naatkalaaga
eppodhada padippom endru engi.. enathu kalloori naatkal mudivadaiyumbothu
pirandha naal parisaaga alikkapattu, Inbam petren :-)

Unknown சொன்னது…

காட்சிகள் கண் முன்னாடி நடக்குற மாதிரி எழுதுறிங்க ...இத தான் நேத்து நான் சொல்ல நினச்சேன் after reading கோழி குழம்பு and முதுமையை போற்றுவோம்...இப்போ "பொன்னியின் செல்வன்"-இல் நீங்க கல்கி பத்தி சொன்ன பின்னாடி தான் .. ஆஹா இத தான நாம கனகுகிட்ட சொல்ல நினைதோமுனு தோனுது...பொன்னியின் செல்வன் படிச்ச எல்லோருக்கும் பின்னாடி இந்த மாதிரி ஒரு அனுபவம் இருக்கும்.ஆனா எல்லாரும் இந்த மாதிரி சொல்ல முடியாது..

VIJAY GANESH.M சொன்னது…

மிகவும் ரசிக்கும் நடை நகைசுவையோடு உங்கள் எழுத்தில் தெரிகிறது.
உதாரணம்
(இது பொன்னியின் செல்வனின் கதை அல்ல. பொன்னியின் செல்வனை நான் படித்த கதை)