கனகைக் கவர்ந்தவை #2















அன்பே
சிவம்!
நான் விரும்பி பார்க்கும் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று. ஒவ்வொரு காட்சியையும் பார்த்து ரசித்திருக்கிறேன். கமலுக்கு எந்த விதத்திலும் குறையாமல் மாதவனும் நடித்திருப்பார். கிரணும், சங்குவும்(நாய்) கூட. அந்த படத்தின் உச்சக் காட்சியில் நல்லசிவம்(கமல்) அன்பரசுக்கு(மாதவன்) எழுதிய கடிதம் முத்தாய்ப்பு. கமல் அவர்கள் குரலின் பெரும் ரசிகன் நான். அந்த குரலில் இக்கடிதம் வாசிக்கப்படுவதை கேட்கும் ஒவ்வொரு முறையும் என் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும், என்னையறியாமல். இதோ அக்கடிதம்.

அன்புள்ள
சக கடவுள் தம்பி அன்பரசுக்கு,

நம் இருவருடைய சித்தாந்தமும் வெவ்வேறாக இருந்தாலும், என்னை அண்ணனாகவே மதித்து எனக்கென்ற நிரந்தரமான ஓர் உறவும் தங்குமிடமும் தர இசைந்த உங்களுக்கு...

பறவைகளுக்கும், துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை. நானும் ஒரு பறவை தான். நிரந்தரம் என்ற நிலையையே அசௌகரியமாகக் கருதும் பறவை. இருப்பினும் என்னிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பு வீண்போகக்கூடாது. அதையும் சேர்த்து உங்கள் மனைவியிடம் மொத்தமாகத் தந்துவிடுங்கள். இனி என் பயணங்களில் நான் தங்கப் போகும் கிளைகளில், என் அருமைத் தம்பியின் கனிவும் நிழழும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்! ஆனால், அடுத்த விநாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் ஏராளம். உங்களை சந்தித்தது கூட அப்படிப்பட்ட ஒரு ஆச்சரியம் தான். ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன். உங்களுக்குத் திருமதியாகப் போகும் பாலசரஸ்வதியின் வாழ்வில் ஏராளமான சந்தோசங்கள் காத்திருக்கின்றன. அதற்கு முழு காரணமாக நீங்கள் இருப்பீர்கள். இருக்க வேண்டும்.

உங்கள் அன்பு அண்ணன்,
. சிவம்

(சன் தொலைக்காட்சியில் படம் ஒளிபரப்பான போது, என் கைபேசியில் குரலை பதிவு செய்து, திரும்ப திரும்பக் கேட்டு தட்டச்சு செய்தது. பிழை இருப்பின் சுட்டவும்)

கருத்துகள் இல்லை: