முதுமையைப் போற்றுவோம்!

கடந்த சனிக்கிழமை இரவு நண்பன் திருமணத்திற்காக மதுரை செல்ல வேண்டி, நெற்குன்றம் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தேன். கோயம்பேடு வெளியூர் பேருந்து நிறுத்தத்தில் பெரும்பாலோனோர் இறங்கி விட நானும் ஒரு பாட்டியும் மட்டுமிருந்தோம்.

"நீங்க எங்க சார் போகணும்?"

"உள்ள டவுன் பஸ் ஸ்டாண்ட்"

"உள்ள போய் இந்த பாட்டிய கோல்டன் பிளாட்ஸ் போற பஸ்ல ஏத்திவிட்றீங்களா?"

"..."

"இவங்க கோல்டன் பிளாட்ஸ் போணுமாம். உள்ள போனா D70 வரும். அதுல ஏத்திவிட்ருங்க"

"....சரி நான் ஏத்திவிட்டுர்றேன்"

"பாட்டி பஸ் ஸ்டாண்ட் முன்னாடி இறக்கி விடுறேன். அவர் கூட உள்ள போ. உன்ன அவர் D70 ஏத்திவிட்டுருவார்"

இருவரும் இறங்கி உள்ளே நடந்தோம்.

"கூடவே வந்து இருக்கலாம். ஆட்டோல ஏத்தி விட்டுட்டுப் போய்ட்டான். ஆட்டோக்காரனுக்கும் உனக்கும் இருக்குறது கூட பெத்த புள்ளைக்கு இல்ல. ம்ம்ம்.....எனக்கு இந்த D70 எல்லாம் தெரியும். இருட்டாயிடுச்சுல அதுதான்..." என் முகத்தை பார்க்காமலே, குனிந்தவாறே பேசிக்கொண்டு வந்தார்.

"நீ எங்க போற?"

"நான் எக்மோர்"

D70 வந்து நிற்கும் இடம் வந்திருந்தோம்.

"எனக்கு ட்ரெயின்க்கு நேரமாகுது. இங்கேயே நில்லுங்க. D70 வரும். பாத்து ஏறிக்கோங்க"

"ரொம்ப தேங்க்ஸ்பா"

"பரவால்ல...பரவால்ல..." என சொல்லி அவர் இடப்பக்கம் நின்று கொண்டிருந்த நான், என வலக்கையை அவர் தோளைச் சுற்றி அணைக்குமாறு கொண்டு சென்று முதுகில் லேசாகத் தட்டினேன்.

இதை எதிர்பார்க்காத அவர் சிறிது வெட்கத்துடன் சிரித்தார். அங்கிருந்து எக்மோர் செல்லும் பேருந்து தேடி நகர்ந்தேன்.

இது ஒரு தற்செயல் நிகழ்வு! என் பாட்டியையோ தாத்தாவையோ, கூட இருந்து கை பிடித்து அழைத்துப்போன சம்பவங்கள் எனக்கு மனத்தில் இல்லை. என் பள்ளி கல்லூரி வாழ்கையின் பெரும் பகுதியை விடுதியில் கழித்ததனால் பெருமளவு வாய்ப்பும் இல்லாமல் போனது. ஒருமுறை, நியாயவிலைக் கடையில் பொருள் வாங்கி விட்டு படியில் கீழிறங்கும் போது, தாத்தாவை விட்டுவிட்டு வேகமாக இறங்கிய போது அருகிலிருந்த ஒரு பெண் "தாத்தா கைய பிடிச்சு கூட்டிட்டுப் போப்பா" என சற்று கடுமையாகவே எச்சரித்தார்.

பொதுவாகவே மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவர்கள் கூட தன் குடும்பத்தில் உள்ளவர்க்கென்று வரும்போது சற்று அலட்சியமாக இருந்துவிடுவதுண்டு. அந்த பாட்டியின் மகன் கூட அப்படி ஒருவராக இருந்து இருக்கலாம்.
***************************************
*
*********************************************


மதுரையில் கல்யாணம். முன்தினம் இரவு நிச்சயதார்த்தம் முடிந்து உணவருந்திக்கொண்டு இருந்தோம். பந்தியில், எங்களுக்கு பின்புறமிருந்த வரிசையில் இருந்து பரிமாறுபவரின் குரல் கேட்டது. "இது தான் கடைசி பந்தி. ஒண்ணும் அவசரம் இல்ல. மெதுவா பொறுமையா சாப்பிடு". திரும்பி பார்த்த போது ஒரு பாட்டி பரோட்டாவை குருமாவில் ஊறவைத்து அதை பிய்த்து சாப்பிட முயன்று கொண்டிருந்தார். கொஞ்சம் சிரமப்பட்டாலும் ரசித்து சாப்பிடுவதாகவே எங்களுக்குப் பட்டது. நாங்கள் முடித்து விட்டு எழுந்த பின்பும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அடுத்த நாள் திருமணம் முடிந்த பின்பு, அப்பாட்டி பாதி குடித்திருந்த 'மிராண்டா' பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு வருவதை பார்த்தேன். நானும் என் நண்பனும் பார்த்து புன்னகைத்துக் கொண்டோம்.

'பரோட்டா பாட்டி' என்று பேர் வைத்து மற்ற நண்பர்களுக்கும் மேற்சொன்ன இரண்டு நிகழ்வையும் விவரித்தோம்.

மாலையில், மணமுடித்த நண்பனின் வீட்டுக்கு சென்றிருந்தோம். புதுமாப்பிள்ளை நண்பன் வாசலில் நின்று கொண்டு எல்லோரையும் வரவேற்பதுவும், செல்பவர்களுக்கு நன்றி கூறுவதுமாக இருந்தான். தற்செயலா அப்பக்கம் நான் வந்த போது தான், அந்த பாட்டி நண்பனிடம் விடை பெற்று அவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தார்.
"நல்லா வைச்சுக்கோங்கப்பு!"

கருத்துகள் இல்லை: