'விதி' வழிப்பட்டதே வாழ்க்கை!


சர்க்கஸ்(இதற்கு தமிழில் என்ன?) பார்க்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை கடந்த சனிக்கிழமையன்று பூர்த்தியடைந்தது. சிறு வயதில் ஒரு முறை சிவகாசியில் நடந்துகொண்டிருந்த சர்க்கஸ் காட்சிக்கு நாங்கள் சென்றிருந்தோம். பாதிக் காட்சியின் போதே பலத்த மழை பெய்யத்துவங்கி விட்டது. கூடாரம் கிழிந்து விடும் அளவுக்கு மழை பெய்ததால் காட்சி நிறுத்தப்பட்டு விட்டது. அதன்பிறகு சிறு சிறு சாலை வித்தைகளைப் பார்த்து இருக்கிறேன். ஆனால் முழுநீள சர்க்கஸ் காட்சி பார்க்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை. சென்னை வந்தபின்பு, ஒவ்வொருமுறை விளம்பரம் பார்க்கும் போதும் சென்றுவிட நினைத்ததுண்டு. ஆனால் இந்த முறை மட்டுமே செயல்படுத்தினேன். வீட்டிலிருந்து அனைவரும்சென்றோம்.

ஜெமினி சர்க்கஸ் இது. காலையிலேயே தொலைபேசி மூலம் முன்பதிவு செய்துவிட்டேன். சிறுவயதில் பார்த்ததுவும், பறக்கும் பாவை, அபூர்வ சகோதரர்கள் படங்களில் பார்த்த காட்சிகளும், ஒரு வித அனுமானத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தன. அபூர்வ சகோதரர்களின் பாதிப்பு நிறையவே. அப்படத்தில், கமல் முதலாளி மௌலியிடம் "நீங்க ஒரு கபடநாடகவேடதாரி முதலாளி" எனும் காட்சி எனக்குப் பிடித்தது எனினும் இப்பதிவிற்கு சம்பந்தம் இல்லாதது. கூடாரத்தின் உள்நுழையும் போதே அப்பு கமலும் மௌலியும் எங்காவது இருக்கிறார்களா எனத்தேடும் அளவிற்கு பாதிப்பு இருந்தது.

  • மதியம் 1, 4, 7 ஆக மூன்று காட்சிகள் ஒரு நாளைக்கு.
  • நான்கு மணிக்காட்சிக்கு மூன்று முப்பதிற்கே உள்ளே அனுமதிக்கப்பட்டோம். கூடாரத்தையும், அங்கு அமைக்கப் பட்டிருந்த அமைப்புகளையும், அதை காட்சியின் போது எவ்வாறு பயன் படுத்துவார்கள் என்ற ஆராய்ச்சியிலேயும் அரை மணி சென்று விட்டது.
  • காட்சி ஆரம்பிக்கும் முன், 120 ரூபாய் டிக்கெட்(இது தான் அதிகபட்சம்) வரிசைகளில் விசிறியும், 30 ரூபாய் வரிசைகளில் நொறுக்குத் தீனியும் விற்றனர். ஆரம்பித்த பின் எல்லா இடங்களிலும் எல்லாம் விற்கப்பட்டது.
  • சரியாக 4 மணிக்கு காட்சியை ஆரம்பித்து விட்டனர். சர்க்கஸ் அணிவகுப்பு தான் முதல் நிகழ்ச்சி. பளீர் உடை பெண்களும், கோமாளிகளும், மூன்று யானைகளும், மூன்று ஒட்டகங்களும், ஒரு குதிரையும் இடம் பிடித்து இருந்த அணிவகுப்பில் ஏனோ ஆண்களுக்கு இடம் இல்லை.
  • அதன் பிறகு ஒன்றொன்றாக பல சாகச நிகழ்ச்சிகள். கரணம் தப்பினால் மரணம் தான், குறைந்த பட்சம் பலத்த அடி விழும் என்ற வகையிலேயே எல்லா செய்கைகளும். தொங்கும் கயிற்றில் அந்தரத்தில் வித்தை, மேஜை மீது உடம்பை ரப்பரை போல் வளைப்பது, அந்தரத்தில் உருளும் வளையத்தின் மேல் நடப்பது, பல பந்துகளை மாற்றி மாற்றி பிடிப்பது, எவ்வித பிடிமாணமும் இல்லாமல் நிற்கும் ஏணி மீது ஏறுதல் என பலபல சாகசங்கள், ஆண்களும் பெண்களுமாய். மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளுக்கு ரசிகர்களின் ஆரவாரமும் பலமாக இருந்தது.
  • சில இடங்களில், வெகு சில இடங்களில், நிலை தடுமாறும் போது ரசிகர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பாமல் அமைதி காத்ததே சாட்சி, எந்த அளவிற்கு ரசிகர்கள் அக்காட்சிகளை வியந்து பார்த்துக்கொண்டிருந்தனர் என்பதற்கு.
  • யானை, குதிரை, ஒட்டகம், நாய், கிளி எல்லாம் பயிற்சியாளரின் கட்டளை இல்லாமலே செய்ய வேண்டியதை செய்தது அதிசயமாக இருந்தது. யானை நாற்காலியில் ஏறியது, உட்கார்ந்தது, ஒற்றை காலில் நின்றது, குடித்து விட்டு மயங்கி விட்ட சக யானைக்கு வைத்தியம் செய்தது, கிரிக்கெட் ஆடியது, கால்பந்தில். அடித்தது எல்லாமே ஸ்டெரெயிட் லாங்-ஆன் லாங்-ஆப் லாப்டட் சாட்களே, வித் பெர்பெக்ட் டைமிங்! இவை எதற்குமே பயிற்சியாளர் அருகில் குச்சியுடன் இருந்தாரே ஒழிய, எதையும் செய்ய சொல்லவில்லை. தானாகவே செய்தன! கிளிக்கு அருகில் மிகச்சிறிய வண்டியை வைத்தபோது, கடகட வென இழுத்து வந்து எல்லையில் வைத்து விட்டு கம்பியில் ஏறிக்கொண்டது.
  • அரங்கில் புகைப்படம் எடுக்கக் கூடாது என அறிவிப்பு பலகையும் இருந்தது, அறிவிப்பும் செய்யப் பட்டது. இருந்தாலும் பலர் தங்கள் கைபேசியிலும், சிலர் புகைப்பட பெட்டியிலும் எடுத்துக்கொண்டு தானிருந்தனர், பிளாஷ் உடனும் கூட.
  • ஒரு நிகழ்ச்சி நடைபெறும் போதே அடுத்த நிகழ்ச்சிக்கான ஆயத்த வேலைகள் பக்கவாட்டில் நடந்துகொண்டிருந்தன. Well planned and well organized!
  • பெரும்பாலானவர்கள் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். சில மேற்கு வங்கத்தினரும், ஒரு சில கேரளத்தினரும், வெகு சில தமிழர்களுமிருந்தனர் குழுவில்.
  • ஒருசிலர் தவிர மற்றவர் முகங்களில் களை இல்லை. கடமை மட்டுமே இருந்தது. ஒரு நாளைக்கு மூன்று முறை, இதைபோல் வருடம் முழுவதும் எனும் இயந்திரவாழ்வில் இதுவும் மற்றுமொரு தொழிலே, என்றமுறையில் புரிந்துகொள்ளக் கூடியதே.
  • இடையிடையே நொறுக்குத்தீனி விற்பவர்களின் நடமாட்டம் எரிச்சலூட்டுவதாக இருந்தது.
ஒரு சர்க்கஸ்'ல் இவ்வளவு பேர் வேலை பார்ப்பார்கள் என்பது எனக்கு செய்தி. சிங்கம் புலி போன்றவைகளும் இருக்கலாம் என எதிர்பர்ர்த்தேன். இல்லை. காடுகளிலேயே இப்பொழுதெல்லாம் சிங்கம் புலி அருகி வருகிறது, சர்க்கஸ்'ல் எங்கே? நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள். சில குப்பையான திரைப்படங்களுக்கு செலவழிப்பதை விட பல மடங்கு மேலானது. ஆனால் பார்க்கும் போது, இது எப்படி சாத்தியம், இது நியூட்டனின் எத்தனையாவது விதி என்ற ஆராய்ச்சிகளை விட்டுவிட்டு சாகசத்தை மட்டும் ரசியுங்கள். அப்பொழுதான் முழு அனுபவம் கிடைக்கும். இல்லையேல் சர்க்கஸ் கூடாரம் இயற்பியல் ஆய்வுக்கூடமாகிப் போகும்!

சர்க்கஸ் கலைஞர்களின் மேடைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை பற்றி பல செய்திகளையும், கட்டுரைகளையும், கதைகளையும் படித்து உள்ளேன். பல விஷயங்கள் எதிர்மறையாகவே இருக்கும். நல்ல நேரம் படத்தில் வரும் "வயித்து கஞ்சிக்கு மனுஷ இங்கே கயித்திலாடுறான் பாரு. ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு" பாடல் அடிக்கடி மனதில் வந்து சென்றது.
They have chosen too much risk to live. After all thats the driving force for their life!

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Neenga Eppi di yo poi circus parthudu vanduteenga... Naanum chinna vayasula irunthu poganumnu nenaikuren.. Ennum mudiyala..

Neenga Ennum koncham feel panne irukalam..

கனகராசு சீனிவாசன் சொன்னது…

சர்க்கஸில் பார்த்தவற்றை மட்டுமே எழுதவேண்டும் என்ற முயற்சி அது. இடையில் வேறு சிலவும் எழுதியதால் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டது. இனிமேல் இதில் கவனம் செலுத்துகிறேன். கருத்துக்கு நன்றி!