மழைக்கஞ்சி!

-சிறுகதை

"எலேய் அய்யனாரு, இங்கனக்குள்ள செத்த நேரம் வந்து ஒக்காந்தா குளுப்பாட்டி விடுவேன்ல. அப்பத்தான சாந்தரம் சாமி கும்புடப் போக சரியா இருக்கும்" சீத்தா பெரியம்மா கூப்பிட்டாள்.

நொங்கு வண்டி ஓட்டிக்கொண்டிருந்த அய்யனார், இதை காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. வண்டியை ஓட்டியவாறே வட்டமடித்துக் கொண்டிருந்தான். அவன் அருகில் சென்று வலதுகையின் நான்கு விரல்களையும் மடக்கி பெருவிரலை மட்டும் உயர்த்தி , கையை தலைக்கு மேலே உயர்த்தி, பெருவிரல் கீழே வருமாறு மணிக்கட்டை கவிழ்த்தி கீழிறக்கி பெருவிரல் தலையை மோதுமாறு இருமுறை செய்து, "குளிச்சயின்னா....", இப்பொழுது வலது கையை கடிகார சுற்றுக்கு எதிர் சுற்றாக காற்றில் இரு முறை அரை வட்டம் அடித்து "அப்புறமா... சாமி கும்புடப் போலாம்..." என இரு கையையும் குவித்துக் காட்டினாள்.

"கம்மாக்கு போவேன்.....குளிக்க"

"எந்த கம்மாயில தண்ணி இருக்கு குளிக்க? ஊரே காஞ்சி போய் கெடக்கு. அதுக்கு தான மழக்கஞ்சி காச்சி சாமி கும்புடப் போறோம். நீ இங்கயே குளி. நான் ஊத்தி விடுறேன்"

ஒண்ணும் சொல்லாமலே அய்யனார் ஓடி விட்டான். சிறிது நேரம் கழித்து வந்து உட்கார்ந்து கொண்டான்.



"அய்யனார் அந்த தெருவின் செல்லப்பிள்ளை. அவனுடைய அம்மாவும் அப்பாவும் அந்த ஊருக்கு பிழைப்பு தேடி வந்தார்கள். ஊர், பேர், சாதி, சனம் எதைப் பற்றியும் வாய்திறக்கவில்லை. "எங்களுக்குன்னு யாரும் எதுவும் இல்ல. இங்க ஒரு குடுசை போட விட்டீங்கன்னா உங்களுக்கு ரொம்ப ஒத்தாசையா இருப்போம்" என்று கேட்ட போது அத்தெருக்காரர்கள் ஏனோ மறுக்கவில்லை. தெருக்கடைசியில், ஒத்த வீட்டுக்கு எதிரில் இருந்த சீமக்கருவேல முள்ளை ஒதுக்கி விட்டு குடிசை போட்டுக்கொண்டனர். வரும்போதே வயிற்றில் அய்யனார் இருந்தான் என்பதை சிலநாட்கள் கழித்து தான் அவன் அம்மா தெருக்காரர்களிடம் கூறினாள். அய்யனார் பிறந்த போது தெருவே கொண்டாடியது. அத்தெருவில் அபொழுது சிறு வயதில் யாருமே இல்லை. ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த முருகேசு தான் இருப்பதிலேயே சின்னவன். எனவே அய்யனார் தெருவின் செல்லப் பிள்ளையாகிப் போனான். அவனுக்கு அய்யனார் எனப் பெயர் வைத்ததும் தெரு வாசிகளே.

இதிப்படி இருக்க அய்யனார்க்கு இரண்டு வயதாகும் போது அவன் அம்மாவும் அப்பாவும் காணாமல் போய் விட்டனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர்களாகவும் திரும்பவில்லை. இதையொட்டி பல கதைகள் பேசப்பட்டாலும் உண்மையான காரணம் என்ன? எங்கு சென்றனர்? என்ன ஆயினர்? என யாராலும் சொல்ல இயலவில்லை. போனவர்கள் போகட்டும், அய்யனார் நம்ம கொழந்தையென தெருக்காரர்களும் விட்டு விட்டனர். அன்றிலிருந்து அய்யனார் எல்லோராலும் வளர்க்கப்பட்டான். நாட்கள் செல்ல செல்லத் தான் தெரிய வந்தது அய்யனாரின் உடல் வளர்ச்சிக்கு ஏற்ப மூளை வளரவில்லையென. பேச்சும் தாமதமாகவே வந்தது. "ச சா சி சீ" வரிசை உச்சரிக்க வரவில்லை, அவனுக்கு. சா க்கு தா தான் சொல்லுவான். சாமி அவனுக்கு தாமி. பேசவும் முடியும், காதும் கேட்கும் ஆனால் சைகை மொழி தான் அவனுக்கு எளிதாக புரிந்தது. எனவே ஒரு முறை சொல்லி அவன் சரியான மறுமொழி செய்யாவிட்டால் சைகை செய்து காட்ட ஆரம்பித்தனர் தெருக்காரர்கள். தலையாட்டல், கையசைத்தல் மட்டுமே பெரும்பாலான மறுமொழிகளாக இருக்கும். ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை தான் பேசுவான். முருகேசுவிடம் மட்டுமே கொஞ்சம் நிறைய பேசுவான்.

இப்பொழுது அவனுக்கு ஏழு வயசு முடிந்து விட்டது. பள்ளிக்கூடம் போக மறுத்துவிட்டான். வலுக்கட்டாயமாகப் போய் விட்டால், எங்காவது ஓடிப் போய்விடுவான். ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது அவனுக்கு பிடிக்காததுவும், முடியாததுவுமாக இருந்தது. நடந்துகொண்டோ ஓடிக்கொண்டோ தான் இருப்பான் எப்பொழுதும். தெருவாசிகள் அவனை மிகவும் பாசத்துடன் பார்த்துக்கொண்டனர். அவன் நடவடிக்கைகளை, செய்கைகளை ஊர்க்காரர்களை கேலி பேச அனுமதிப்பதில்லை அவர்கள். செய்தால் அத்தெரு இளைஞர்களுக்கு கோபம் வந்துவிடும். அவனை குளிக்க வைக்கவும், சோறு போடவும், துணி வாங்கிக் கொடுக்கவும் நிறைய பேர் இருந்தனர். சாமி கும்பிடுவது அய்யனார்க்கு மிகப் பிடித்தமான ஒன்று. ஊர்த் திருவிழா மற்றும் நல்ல நாட்களில் கோயிலுக்குப் போகும் பெண்களுடன் சேர்ந்துகொள்ளுவான். கோவிலில் முதல் வரிசையில் சாமிக்கு நேர் எதிரே நின்று தான் கும்பிடுவான்.



ஊரில் இந்த வருடம் பெய்ய வேண்டிய பருவமழை தள்ளிக்கொண்டே சென்றது. போன வருடமும் குறைந்த அளவே மழை பெய்ததால் கம்மாய், குளம், குட்டை எல்லாம் வற்றி விட்டன. கிணறுகளில் மட்டும் கொஞ்சம் தண்ணி இருந்தது. வற்றாத கிணறு எனப்பட்ட குடிநீர் கிணற்றில் கூட தண்ணீர் கீழே சென்றுவிட்டது. ஐப்பசி தாண்டி கார்த்திகை பாதி கடந்தும் மழை பெய்யவில்லை. இப்படியே சென்றால் சித்திரையில் குடிக்கவும் விவசாயத்திற்கும் சிறிதளவு கூட தண்ணி இருக்காது என்று பேசிக்கொண்டனர். ஊர்க்கூட்டம் போட்டு அனைவரும் சேர்ந்து மழைவேண்டி மழைக்கஞ்சி காச்சி மாரியம்மனுக்குப் படைப்பதென முடிவு செய்தனர். வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யவும், கஞ்சி காய்ச்ச தேவையான பொருட்களும், பலி குடுக்க ஆடும் வாங்க வேண்டிய பணத்திற்கு தலைக்கட்டுக்கு எவ்வளவு வரி எனவும் தீர்மானித்து வசூலும் செய்யப் பட்டது.

இன்றைக்குத்தான் அந்த நாள். அதற்குப் போகத் தான் சீத்தா பெரியம்மா அய்யனாரை தயார்படுத்திக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியும் சாமி கும்பிட போவதற்கு அய்யனார் தானாகவே வருவான் என்று. ஆதலால் ஒன்றும் பெரிதாக அவனை வற்புறுத்தவில்லை.



ஊரே மாரியம்மன் கோவிலில் கூடி இருந்தது. ஒரு பக்கத்தில் பெரிய வட்டையில் கஞ்சி காச்சிக் கொண்டிருந்தனர். அரிசி, பருப்பு, கேழ்வரகு, கம்பு, காய்கறிகள் எல்லாம் போட்டு ஆக்கப்படும் ஒருவிதமான கூட்டாஞ்சோறு அது. வடித்த சோறு போலவும் இல்லாமல், கஞ்சியாகவும் இல்லாமல் அரைப் பக்குவத்துடன் கிண்டப்படும் சோறு அது. மறுபக்கம் பூசைக்குத் தேவையான ஏற்பாடுகளை கோவில் பூசாரியும் இன்னும் இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ஊர்ப் பெரியவர்களும் வயசானவர்களும் கோயிலின் பக்கவாட்டில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். பெண்கள் விரிக்கப் பட்டிருந்த தார்ப்பாய்களில் உட்கார்ந்திருந்தனர். இடம் இல்லாதவர்கள் நின்று கொண்டு இருந்தனர்.

இப்பொழுதே மேகம் கூட ஆரம்பித்திருப்பதாக சிலர் பேசிக்கொண்டனர். பலி குடுக்கப் பட வேண்டிய ஆடு மாலையும் கழுத்துமாக அருகிலிருந்த மரத்தில் கட்டப் பட்டிருந்தது. கஞ்சி ஆகிவிட்டது எனச் சொல்லி அதை எடுத்து வந்து அம்மனுக்கு முன்னால் வைத்தனர். பூசாரி பூசையை ஆரம்பித்தார். அனைவரும் எழுந்து கைகூப்பிய வண்ணம் பூசையைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அங்கம்மாள் பாட்டி சத்தமாகவே தன் பிரார்த்தனையை முன்வைத்தாள். "அம்மா மகமாயி, மாரியம்மா...இப்பவே தண்ணி இல்லாம போய்டுச்சு. இப்பிடியே போனா நாங்க எல்லாம் எங்க போறது. மனுஷங்களாவது அங்க இங்க தேடி தண்ணி குடிச்சுகிடுறோம். இந்த ஆடு மாடு கோழி எல்லாம் என்ன பண்ணும்? வானம் பாத்த பூமிய வைச்சுக்கிட்டு, மழ பெய்யலைன்னா நாங்க என்ன பண்ணுவோம்? நாங்க குடுக்குற இந்த காணிக்கைய ஏத்துகிட்டு மனம் குளுந்து மழ பெய்ய வையிமா"

மேற்குத் திசையில் ஒரு மின்னல் வெட்டியது. மக்கள் சந்தோசத்துடன் பூசையைக் கவனிக்கத் தொடங்கினர். பூசாரி படையல் வைத்து, அம்மனுக்கு மாலை சாத்தி, தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டிவிட்டு, ஆட்டை வெட்டுமாறு தலையசைத்தார். அரிவாளுடன் நின்றிருந்த இருளப்பன் ஆட்டை கோவிலுக்கு நேரே கொண்டு வந்து ஆடு அம்மனை நோக்கியவாறு இருக்குமாறு செய்து தலையில் மஞ்சள் நீர் ஊற்றினான். ஆடு தலையை குலுக்கியதும் ஒரே வெட்டு. தலை தனியே போய் விழுந்தது. உடல் கீழே விழுந்து துள்ளியது. ரத்தம் பீய்ச்சியடித்து அனைவர் மேலும் தெறித்தது. பெண்கள் அனைவரும் குலவை இட்டனர். மறுபடியும் மின்னல் வெட்டியது. இடி இடித்தது. மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. காற்றில் ஈரப்பதம் கூடி இருந்தது.

பூசை முடிந்து அனைவருக்கும் திருநீறு கொடுத்தார் பூசாரி. அம்மனுக்குப் படைத்தது போக மீதமிருந்த கஞ்சியை அனைவருக்கும் வழங்குமாறு பூசாரி சொல்ல அதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாயின. அனைவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்களுடன் வரிசையில் நிற்க ஆரம்பித்தனர். தூறலும் ஆரம்பித்து விட்டது. அதை பொருட்படுத்தாது அனைவரும் சாமி கும்பிடவும் கஞ்சி வாங்கவும் செய்து கொண்டிருந்தனர். பெண்கள் வானத்தை நோக்கியும், அம்மனை நோக்கியும் மீண்டுமொருமுறை குலவையிட்டனர். மழை வலுக்க ஆரம்பித்தது. இப்பொழுது அனைவரும் ஒதுங்க இடம் தேடி ஓடினர். கோயில் மண்டபத்திலும், போட்டிருந்த கொட்டகையிலும் ஒதுங்க ஆரம்பித்தனர். கோயில் அருகினில் இருந்த வீட்டுக்காரர்கள் தங்கள் வீடுகளுக்கு மழைக்கு நடுவே ஓடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது சீனிச்சாமி வாத்தியார் தான் முதலில் பார்த்து சொன்னார் "இங்க பாருய்யா. அய்யனார் கொடையோட வந்திருக்கான்"னு.

மழையில் குடை பிடித்துக்கொண்டு வந்த அய்யனார் கொட்டகையில் ஒதுங்கி நின்ற முருகேசுவிடம் "வா...வீட்டுக்கு..." என்று குடைக்குள் அழைத்தான். முருகேசு ஓடிச் சென்று அவனுடன் குடைக்குள் புகுந்துகொண்டான். அவனை அணைத்துக் கொண்டு மழையில் நனையாதவாறு நடக்கும் போது அய்யனார் சொன்னான்
"தாமி மேல நம்பிக்கையா இருந்தா....தாமி மழ குடுக்கும்...."
"எனக்குத் தெரியும் மழ வரும்ன்னு. அதான் கொடை கொண்டாந்தேன்..."

-----*****-----

இந்த கதைக்கான கரு சில வருடங்களுக்கு முன்பு மின்னஞ்சலில் வந்தது. அதை கீழே கொடுத்துள்ளேன். இதனை தமிழாக்கம் செய்யும் என் முயற்சியே மேற்கண்ட கதை.

Drought was devastating to the farmers of yesterday. Even rich, fertile ground becomes cracked and hard. Healthy crops wither and begin to die. The farmer’s life, money and hope is tied up in the wilting crop as he waits for rain. The occasional clouds that float past are only hollow promises. He waits, because that is all the farmer of yesterday could do.

Every conversation turned to the same concern, "When is it going to rain?" Even in the little white church between the rows of wilting corn, the wrinkles that creased their brow and the quiver in their voice mirrored their fear, "When is it gonna rain? This drought can’t hold out forever."

Somebody suggested it, no one was sure exactly who, but everyone agreed it was a good idea- a prayer meeting was scheduled. They were going to pray for rain. What a spiritual idea. After weeks of drought they finally decided to pray.

Everyone came. They were desperate. The entire town depended on those crops. They came with dust on their shoes and deep furors of concern etched in their heart. Some were wrinkled and white haired, some were young and strong from hard work and good food. Some held tiny babies in their arms, but they all came to pray.

They all came to pray except one little girl, she made her way to the front row where she laid it down on the pew. The others came to pray, but she came to get rain. Why would I make such a bold statement? Because I saw the red umbrella that lay beside her on the pew.

கருத்துகள் இல்லை: